செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி
செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட, வேறு வகையில் அவருக்கு மரியாதை செய்ய முடியாது. தொழில் துறை, அணைக்கட்டுகள், விவசாய மேம்பாடு, அனைத்து கிராமங்களிலும் கல்வி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு உயிர் நாடியாக, உறுதுணையாக இருந்தவர் காமராஜர்.
அவரது வழிக்காட்டுதலே தமிழகம் கல்வியில் முன்னேறியதற்கு முக்கிய காரணம். 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு ஒரு புதியத் திட்டத்தைக் கூட கொடுக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை ஒட்டுமொத்தமாக மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மொரிசீயஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகிறார். அடிப்படை ஆதாரமில்லாமல், நாகரீகம், பண்பாடு இல்லாமல் அவர் பேசி வருகிறார்.
செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத வரை அவர் குற்றவாளி கிடையாது. 33 மத்திய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது. நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனினும் 80 சதவீத பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். ஒரு திட்டம் தொடங்கும்போதே குறை சொல்லக் கூடாது.
குறைபாடுகள் இருந்தால் முதல்வர் நிவர்த்தி செய்வார். திட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால், ஜாதியை சொல்லி வெற்றிப் பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறார். பல மதங்கள், ஜாதிகள், மொழிகள் கொண்ட இந்தியாவில் ஒரே சட்டம் என்பது சாத்தியமில்லை. நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை சொல்லி, அதானி, அம்பானி தொடர்பான விவகாரங்களை மறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர் என்றார்.