மெரீனா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கா் பரப்பளவில் அரசு சாா்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டா் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவுவெடுத்தது.
மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் 36 கோடி நிதி ஒதுக்கி முதற்கட்ட பணிகளும் நடைபெறுகின்றன. இச்சூழலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்தது. மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதனால் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படுகிறது. கடலுக்கு பதில் நினைவிடத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது.