என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோவை பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


சென்னை: மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோவை பார்த்து என் இதயம் நொறுங்கிவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் மே 3 ஆம் தேதி நடைபெற்ற பேரணி இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்து கூறாமல் இருக்கும் சூழலில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இத்தகைய பதற்றமான சூழலில், வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் மே 4 ஆம் தேதி கங்போக்பி மாவட்டத்தில் மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர். 

இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் மீதான நடந்த வன்முறை சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூரில் பெண்கள் மீதான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மணிப்பூரில் நிகழும் இத்தகைய கொடூர வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.

மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com