மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு 2013-2014-ஆம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1000/- முதல் ரூ.7000/- வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதலமைச்சர் “மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது
வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி, 1-முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000/-என்பதனை ரூ.2,000/- ஆகவும், 6-ஆம் முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000/- என்பதனை ரூ.6,000/- ஆகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.4000/-
என்பதனை ரூ.8000/- ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.6,000/- என்பதனை ரூ.12,000/- ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.7,000/- என்பதனை ரூ.14,000/- ஆகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க: ஞானவாபி மசூதி வழக்கு: ஆய்வு நடத்த அனுமதி!
இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்டபின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.