
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலகப் புகழ் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயர் எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக ஸ்ரீஅபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக ஆக்கிய திருவிளையாடல் உள்ளிட்ட பல்வேறு தலபெருமைகளை உடைய இவ்வாலயத்திற்கு திரளான பக்தர்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக உக்ரதசாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஸ்ரீஅபிராமி அம்மன்
இந்த கோயிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி, கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீ அபிராமி எழுந்தருளினர்.
இதனையடுத்து மேல வீதியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேல வீதியில் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இதில் கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருத்தகிரி, கோயில் காசாளர் களியராஜ், ஆலய குருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீசார் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.