திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு தாயார் எழுந்தருளும் உள்பிரகாரத் திருத்தேரோட்டம் சனி்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, கோயிலில் உள்ள படிதாண்டா பத்தினி செங்கமலத்தாயாருக்கு 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஜூலை 14-ஆம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் செங்கமலத்தாயாருக்கு சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பல்வேறு வாகனங்களில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.
இதையொட்டி, 56 அடி உயரமும், 30 அடி சுற்றளவில், 25 டன் எடையில் அமைக்கப்பட்டிருந்த திருத்தேரின் மேல்புறத்தில் கலசம் பொருத்தப்பட்டிருந்த்து. தேரின் முகப்பில் இரண்டு கயறு வடமும், இரண்டு இரும்புச் சங்கிலி வடங்களும் பிணைக்கப்பட்டிருந்தது.
மாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கோயில் யானை செங்கமலம் முன் செல்ல முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் , ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன் , அறங்காவலர்கள், பக்தர்கள், ஆன்மிக அர்வலர்கள், தேசியப்பள்ளி மாணவர்கள், செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோரால் தேர் வடம் பிடிக்கப்பட்டு, திருக்கோயில் உட்பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தது.
அழகிய வேலைப் பாடுகளுடன் அமைந்திருந்த இந்தத் திருத்தேரில் செங்கமலத்தாயார் எழுந்தருளி, கோயிலின் உட்பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையும் படிக்க: ஹேஸில்வுட் வேண்டுதல் பலித்தது: மழையால் ஆஷஸ் போட்டி தாமதம்!
நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் , தக்கார் ப.மணவழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், விழா குழுவினர், சுந்தரக்கோட்டை செங்க மலத் தாயார் அறக்கட்டளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.