மணப்பாறை அடுத்த கண்ணுக்குழியில் அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பியில் சிக்கிய விவசாயி உடல் முழுவதும் கருகி, தலை முழுமையாக சாம்பலாகிய நிலையில் பலியானார்.
அறுந்து விழுந்த உயரத்த மின் கம்பியால், வேலியில் மின்சாரம் பாய்ந்ததில் பசு ஒன்றும் பலியானது. சம்பவ இடத்துக்கு மருங்காபுரி வட்டாட்சியர், மின் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் கண்ணுக்குழி கிராமத்தில் இரவு பலத்த காற்று வீசியது. இதில் அப்பகுதியில் செல்லும் உயரழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. அறுந்து விழுந்த மின் கம்பி அங்குள்ள விவசாயி ராமு என்பவரது வீட்டின் கம்பி வேலியில் சிக்கியது. கம்பி வேலி முழுவதும் உயரழுத்த மின்சாரம் பாய்ந்த நிலையில் அங்கு வேலி அருகாமையில் வைக்கப்பட்டிருந்த விறகு பட்டறை தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
அதேநேரம் அருகில் உள்ள வீட்டில் வசித்துவந்த ராமுவின் மைத்துனர் விவசாயியான பழனிசாமி(54), தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார். விறகு பட்டறை தீப்பற்றி எரிவதை கண்ட பழனிசாமி அதை அணைக்க முற்பட்டுள்ளார். அப்போது கம்பி வேலியில் பாய்ந்துக் கொண்டிருந்த உயரழுத்த மின்சாரம் விவசாயி பழனிசாமி மீது பாய்ந்துள்ளது. இதில் விவசாயி பழனிசாமி நிகழ்விடத்திலே உடல் முழுவதும் கருகி, தலை முழுவதும் சாம்பலாகி உயிரிழந்தார். அதே சமயம் ராமுவின் பசு ஒன்றும் கம்பி வேலியில் பாய்ந்திருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வளநாடு போலீஸார் பழனிசாமி உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பலத்த காற்று வீசியதே மின் கம்பி அறுந்து விழுந்தது காரணம் என்ற போதிலும், உயிரழுத்த மின் கம்பிகளை முறையற்ற மின் இணைப்புகள் மூலம் அமைக்கப்பட்டிருப்பது தான் கம்பியின் பலத்தை குறைத்து அறுந்து விழும் நிலைக்கு வந்தது என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், முறையான பாதுக்காப்பான முறையில், மின் கம்பி இணைப்புகளை சரி செய்து தர வேண்டும், விசாயிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், தகப்பனை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நிகழ்விடத்தில் மருங்காபுரி வட்டாட்சியர் செல்வசுந்தரி, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக பணியாளர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.