தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை அடுத்த குரங்கு முடி தொழிற்பேட்டை பகுதியில் தேயிலைத் தோட்டத்திற்கு உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் தேயிலைத் தொழிலாளர்கள் பணியில் இருந்து பதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உள்பட்ட குரங்குமுடி, சிவாகாபி, முருகன் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒற்றைக் காட்டு யானை ஆனது உலா வருகிறது. அப்பகுதியில் பலா மரங்கள் அதிக அளவில் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்காகவே தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பணியில் ஈடுபடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விரட்ட முற்படுகிறது . இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் அப்பகுதியில் இருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓட்டம் பிடிக்கின்றனர்.
எனவே வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டியிருக்கும் ஒற்றைக் காட்டுயானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.