கடலூர் - நெய்வேலி வழித்தடத்தில் செல்லும் தொலைதூர அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பாமகவினர் நிறுவனத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் காவல் துறையினர் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையும் படிக்க: நெய்வேலி செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்!
இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நெய்வேலி - பண்ருட்டி சாலையில் போக்குவரத்து ஓரளவு சீரானது. போராட்டம் நடத்த இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.