ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இரு அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்து நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அருவிகளில் குளிப்பதற்குத் தடைவிதித்துள்ளார். தடை உத்தரவின் காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, ஒகேனக்கல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திடீரென ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.