ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சந்திப்பு வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த டாரஸ் லாரி வேகமாக மோதியதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேம்பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் உள்ள சுவரில் அமர்ந்திருந்த நான்கு பேர் மீது அரசு பேருந்து மோதியதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அரசு பேருந்தின் பின்பக்கம் முழுதுமாக நொறுங்கி பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்குவதால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் லேசான காயமடைந்தவர்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும், படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் இரங்கல்
மேலும் இந்த விபத்தால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
ஒரடம் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராட்சத கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கும் அரசு பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததுடன் பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்குவதால் பரபரப்பு நிலவி வருகிறது.