அரக்கோணம்: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் மீது மர்மநபர்கள் கற்களை வீசியதில் சன்னலோரம் அமர்ந்திருந்த 4 பெண் பயணிகள் காயமடைந்தனர்.
அப்பயணிகளுக்கு அரக்கோணம் ரயில்நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னையில் இருந்து பிற்பகலில் திருப்பதிக்கு செல்லும் விரைவு ரயில் சென்னை, பேசின்பாலம் - வியாசர்பாடி ஆகிய இரு ரயில்நிலையங்களுக்கு இடையே சென்றுக்கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த சிலர் ரயில் மீது கற்களை வீசியுள்ளனர்.
இதில் அந்த ரயிலில் பயணம் செய்த சென்னை, வடபழனியை சேர்ந்த ஜெ.குமாரி(65), மீனாட்சி(48), அனிதா(20), சூளைமேட்டை சேர்ந்த முருகேஸ்வரி(56) ஆகிய 4 பெண்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அப்பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ரத்தபோக்கு அதிகம் காணப்பட்டதால் ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு வந்ததும் அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே கோட்ட மருத்துவமனையின் உதவி கோட்ட மருத்துவ அலுவலர் விக்னேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் 4 பயணிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இதனால் அரக்கோணம் ரயில்நிலையத்தில் இருந்து திருப்பதி விரைவு ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.