தூத்துக்குடியில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே காய்கனிகளின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. இதற்கு போதிய பருவமழை பெய்யாததும், வடமாநிலங்களில் இருந்து காய்கனிகளின் வரத்து குறைந்ததும் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தக்காளி கிலோ ரூ.160க்கு விற்பனையாகி வந்த நிலையில், திங்கள்கிழமை மொத்த விற்பனை ரூ.180க்கும் சில்லரை விற்பனை ரூ.200க்கும் விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. மேலும், தக்காளிகளும் தரம் குறைவாக உள்ளன. இதனால், பொதுமக்களும், தக்காளி 100 கிராம், 200 கிராம் என குறைவாகவே வாங்குவதால் மிகவும் சிறமமாக உள்ளது என தெரிவித்தனர்.
அதேப்போன்று இஞ்சி கிலோ ரூ.280, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.90, வெண்டைக்காய் ரூ.60, பூண்டு ரூ.180 என விற்பனையாகிறது.