கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றிவரும் அரிக்கொம்பன்!
நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சுற்றி வருவது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் நெடுஞ்சாலை பகுதியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த அரிக் கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறையில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.
தற்போது காட்டுப் பகுதியில் சுதந்திரமாக சுற்றி வரும் அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அரிக்கொம்பன் யானையின் காதில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னல் மூலம் அதன் இருப்பிடத்தை வனத்துறையினர் அறிந்து வருகின்றனர்.
தற்போது கிடைத்த தகவலின்படி அரிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள அப்பர் கோதையாறு வனத்தில் உள்ளது என்றும் அப்பகுதியில் சுமார் 4 முதல் 5 கி.மீ.பகுதியில் சுற்றி வருகிறது , அப்பர் கோதையாறு, முத்துக்குழி வயல், குற்றியாறு பகுதிகளில் இருக்கும் உணவைச் சாப்பிட்டு வருவதாகவும், வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.