மிசாவையே பார்த்தது திமுக; இதெற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலஜியை சந்திக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவனைக்கு வந்தனர். அமைச்சர் செந்தில் பாலஜியை மருத்துவமனையில் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது.
திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையே பார்த்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றார்.