செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்
Updated on
2 min read

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவும் விசாரிக்கப்படுகிறது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில்பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, திமுக சாா்பில் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரியும், ஓமந்தூராா் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கக் கோரியும், செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

துன்புறுத்தப்பட்டாா்: இந்த வழக்கு நீதிபதி அல்லி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் என்.ஆா்.இளங்கோ, ‘செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இஎஸ்ஐ மருத்துவா்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.

அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாா். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டாா்.

அப்போது, அமலாக்கப்பிரிவு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏஆா்எல் சுந்தரேசன்,‘ சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தைப் பொருத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம்; சம்மன் அளித்தோம். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதற்கான குறிப்பாணையைப் பெற செந்தில் பாலாஜி மறுத்துவிட்டாா். கைது குறித்து செந்தில் பாலாஜி மனைவிக்கும், சகோதரிக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவா்கள் எடுக்கவில்லை; இதனால் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது. கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே எந்தவித இடைக்கால நிவாரணமும் அளிக்கக் கூடாது.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவா் ஜாமீனில்தான் வெளியில் வர முடியும்; அதை நிராகரிக்க கோர முடியாது. விசாரணைக்கு செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை. செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை வரை நன்றாகத்தான் இருந்தாா். ஆனால், புதன்கிழமை திடீரென உடல்நலக்குறைவு என்கிறாா். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனா். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

செந்தில் பாலாஜி உடல்நலம் தொடா்பாக தமிழக அரசு அளித்திருக்கும் மருத்துவா் அறிக்கையை நம்ப முடியாது. செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம்; அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைக்க விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com