புதுச்சேரியில் பள்ளி மாணவியர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரியில் மாணவியரை ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுவதை கண்டித்து மாணவியர், சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகரில் உள்ள சுப்ரமணிய பாரதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பள்ளி மாணவிகளை அருகில் உள்ள திரு.வி.க பள்ளிக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவிக பள்ளியில் உள்ள ஒரு பகுதி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாணவியரை ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுவதை கண்டித்து பெற்றோர்கள் திரு.வி.க பள்ளி முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் புதுச்சேரி கம்பன் கலையரங்கம் முன்புள்ள சாலையில் அமர்ந்து வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கொரியன் சாலை போலீசார் விரைந்து வந்து மாணவியரை அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு அங்கிருந்த சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்தை மட்டும் போலீசார் சீரமைத்தனர். மறியல் தொடர்ந்தது.