ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாத்து புனரமைக்க தமிழ்நாடு அரசு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்து சமய அறநிலைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருக்குளங்கள் சீரமைப்பு, திருத்தேர் புனரமைப்பு, பெருந்திட்ட வளாகப் பணிகள், 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்தல்,
திருக்கோயில் நந்தவனங்களை பராமரித்தல், திருக்கோயில் யானைகள் பராமரிப்பு, அன்னதானத் திட்டம், பசுக்கள் காப்பகம் பராமரிப்பு, உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டுமானப் பணிகள், திருத்தேர் கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து 2022 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்து கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை தேவஸ்தானங்களுக்கு அரசு சார்பில் கூடுதலாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு மூன்று கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 108 புத்தகங்கள் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஓலைச்சுவடிகளை பாதுகாக்க ஆய்வகத்தை அமைத்தது.
கோயிலுக்குச் சொந்தமான அலுவலகங்களை ரூ. 15 கோடியில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்படாத பல கோயில்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.