
நாகை நகராட்சி வாகனம், உயர் அழுத்த மின்சாரக் கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டதில் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கோட்டை வாசல்படியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டுகின்றன.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி லாரி மூலம் ஓட்டுநர் ஜோதி மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் விஜய் ஆகியோர் கோட்டை வாசல்படி குப்பைக் கிடங்கில் கொட்ட முற்பட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. அப்போது லாரியில் இருந்த தூய்மைப் பணியாளர் விஜய் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஓட்டுநர் ஜோதியை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்நிலையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட சட்டப்பேரவை தொகுதி செயலர் அறிவழகன் தலைமையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நகராட்சி தலைவர் இரா.மாரிமுத்து மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்த ஒட்டுநரரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து மருத்துவனைக்கு சென்ற நாகை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜெ.முகம்மது ஷா நவாஸ், உயிரிழந்த தூய்மைப் பணியாளர் விஜய் குடும்பத்தினருக்கும் காயமடைந்த ஓட்டுநர் ஜோதி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.