நெய்வேலி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற வடலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
கடலூர் மாவட்டம், வடலூரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு பக்ரீத் பண்டிகை வருகின்ற 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, காடாம்புலியூர், வானதிராயபுரம், வடக்குத்து, தம்பிப்பேட்டை, சேத்தியாதோப்பு, மருவாய் , கல்குணம், அகரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனை செய்வதற்காக வடலூர் ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்: பிரதமர் மோடி
இந்த ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சென்னை, மதுரை, அரியலூர், ராமநாதபுரம்,தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.
இவர்கள் அதிகாலை முதலிலே வடலூர் ஆட்டுச் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலை குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரையில் விற்பனை செய்யப்பட்டது.
வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.