கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைத்திலிங்கம்
கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுயள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் பாராட்டி திங்கள் கிழமை மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, காங்கிரஸ் புதுவை மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., எம்எல்ஏ மு. வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது: புதுச்சேரியில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. நிலங்களை விற்றவர்கள், வாங்கியவர்கள் அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம் விற்பனையை தடுக்க அவற்றை பூஜ்ஜிய மதிப்பிற்கு கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கிற கடல் அரிப்பைத் தடுக்க புதுவை அரசு மத்திய அரசு உதவியை நாடி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.