வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
திமுகவை சேர்ந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவ்வழக்கு 12.07.2022 அன்று வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டு 19.10.2022-ல் விசாரணை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 07.11.2022 அன்று நேரடியாக அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் அஜராகினர்.
இதனை அடுத்து இவ்வலக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விலக்கு பெற்றனர். இதனை அடுத்து கடந்த ஏழு மாதங்களாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் 172 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பொன்முடி அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் 5.20 க்கு நீதிபதி முன் இருவரும் ஆஜராகிய நிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதாலும் இருவரையும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டார்.
இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.