தஞ்சாவூர்: சிதம்பரம் கோயில் பிரச்னையில் அரசியல் செய்யக்கூடாது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சிதம்பரம் கோயிலில் உள்ள கனக சபை மேடையில் நான் பல முறை தரிசனம் செய்துள்ளேன். மிகச் சில முறை கனக சபை தரிசனத்தை நிறுத்தி வைப்பர். இது பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம். இதில் அரசியல் செய்யக்கூடாது.
எதிர்க்கட்சிகள் கூடிக் கலைவது அவர்களுடைய பொழுதுபோக்கு. கொஞ்ச நாள் வேலை இல்லாமல் இருந்த அவர்கள், இப்போது கூடிக் கலையத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இருப்பது குறித்து எங்களுடைய தலைவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். மற்ற விஷயங்கள் குறித்து அகில இந்திய தலைமையும், மாநிலத் தலைமையும் மேற்கொள்ளும்.
திமுக ஒரு குடும்பம். நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துகிறோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். திமுகவின் பிதாமகனான பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தை இது. அவரது குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர் இப்படி இருக்கிறாரா என திமுகவினரால் அடையாளம் காட்ட முடியுமா? எமர்ஜென்சி காலத்தில் சிறைக் கொடுமையின் காரணமாக காலமான சிட்டிபாபுவின் குடும்பத்திலிருந்து யாராவது கட்சியில் இருக்கின்றனரா? இதுதான் குடும்ப அரசியலா?
தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பாராட்டுகிறேன். ஆனால் எங்கு மூடப்பட்டிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
மணிப்பூரில் நிலவும் பிரச்னை வருத்தம் தரக்கூடியதுதான். அதை எப்படி சரி செய்வது என பிரதமர், உள்துறை அமைச்சர் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்றி வருகின்றனர். இதை விமர்சனம் செய்வது குறைப்பிரசவம் போன்றது.
மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் உயிர் மற்றும் குடும்பத்தைக் காக்கக்கூடியது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.