ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில், 11வது சுற்று முடிவில், 83,628 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இதையும் படிக்க.. காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து பல சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 11 சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஸ்டென்ட் பொருத்தி அறுவைசிகிச்சை
16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
11 சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 82,995 வாக்குகள் பெற்று 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 31,962 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 4,062 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், தேமுதிக வேட்பாளர் 605 வாக்குகள் பெற்று அடுத்த இடத்திலும் உள்ளனர்.
இன்னும் 42,971 வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருப்பது அவரது வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதாகவே உள்ளது.
முன்னதாக, 4 ஆவது சுற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக சார்பாக அவர் மட்டுமே இருந்த நிலையில் தோல்வி விரக்தியில் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.
போட்டியிட்ட 77 பேரில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களைத் தவிர 75 வேட்பாளர்கள் டெபாசிட் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.