சீர்காழியில் ரூ. 1.11 கோடி செலவில் அரியாப்பிள்ளை குளத்தை அழகுப்படுத்தும் பணி தொடங்கியது!
சீர்காழியில் ரூ. 1 கோடியே 11 லட்சம் செலவில் அரியாப்பிள்ளை குளத்தை அழகுப்படுத்தும் பணி காவல் துறை பாதுகாப்புடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ. 1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி , சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரியாப்பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து இன்று சீர்காழி டிஎஸ்பி லா மெக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு, முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.
இதையும் படிக்க: பொதுத் தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை
நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. காவல் துறை பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.