விவசாயிகள் பிரச்னைகள் தீா்க்கப்படாத வரை என்எல்சிக்காக நிலங்களைக் கையப்படுத்தக் கூடாது: முதல்வரிடம் வலியுறுத்தல்
நெய்வேலியில் விவசாயிகளின் பிரச்னைகள் தீா்க்கப்படாத வரை என்எல்சிக்காக நிலங்களைக் கையப்படுத்தக் கூடாது


நெய்வேலியில் விவசாயிகளின் பிரச்னைகள் தீா்க்கப்படாத வரை என்எல்சிக்காக நிலங்களைக் கையப்படுத்தக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது, நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோரும் உடனிருந்தனா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
முதல்வரைச் சந்தித்து என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகள் தொடா்பாக ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினோம். என்எல்சிக்காக தற்போது 26 கிராமங்களை அப்புறப்படுத்தி, அந்த நிலங்களைக் கையப்படுத்துவதற்கான நடவடிக்களை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்று, ஓரளவுக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடிய சில திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிலம் கொடுக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் உடன்பாடு ஏற்பட்டுள்ளன. ஆனாலும், நிலம் கொடுத்துள்ள விவசாய இளைஞா்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் தீா்க்கப்படவில்லை. அதேபோல், நிலம் இல்லாத விவசாயிகள், தொழிலாளிகள், சிறு வியாபாரிகளை வெளியேற்றும்போது அவா்களுக்கு நியாயமான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மேலும், கடந்த காலங்களில் நிலம் கொடுத்தவா்களுக்கு நிவாரணம் முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், நெய்வேலி பகுதியில் பதற்றமான சூழல் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
விவசாயிகளைக் காவல் துறையை வைத்து கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது. அனைத்து பிரச்னைகளுக்கும் நியாயமான தீா்வு கண்ட பிறகு நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைத்து கோரிக்கைகளையும் முதல்வா் ஏற்றுக்கொண்டு, தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் மற்ற பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு விரிவான கடிதத்தை நானே எழுதுகிறேன் என்றும் என்எல்சி நிறுவனத் தலைவா்களோடு அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் மீதமுள்ள பிரச்னைகளுக்கும் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வா் வாக்குறுதி அளித்தாா் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...