கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு இறந்த மூதாட்டியின் உடலுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த, முரட்டுசோழகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் முருகன் மனைவி மூக்காயி (95), இவர் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். இதையடுத்து அவரை நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில், இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் அடைத்து விட்டதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தியபோது பாதையை திறப்பதற்கு முற்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த இறந்த மூக்காயின் உடலுடன் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு மயானத்திற்கு பாதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பொதுத்தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு மூதாட்டியின் உடலுடன் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
மேலும், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மூக்காயின் கணவர் முருகன் இருந்தபோதும் இதேபோன்று மயானத்திற்கு பாதைவிடாமல் தகராறு செய்து வந்தநிலையில், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மூலம் பாதை ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில் மீண்டும் அந்த மயான பாதையை அடைத்துள்ளதால் இந்த பிரச்னை தொடர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து தகவறிந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.