மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்த ராஜேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்திலிருந்து விமானத்துக்கு செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று பயணித்துள்ளார்.
அப்போது உடன் பயணித்த ராஜேஸ்வரன் என்பவர், எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்தபோது, 'துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் சின்னம்மா சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்' என முகநூலில் நேரலை செய்துகொண்டிருந்தார்.
இதைக் கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், உடனடியாக ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்த அ.தி.மு.க.வினர் சிலர் ராஜேஸ்வரனை தாக்கத் தொடங்கினர். இதில் அவரின் சட்டை கிழந்தது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அவனியாபுரம் காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜேஸ்வரன் அ.ம.மு.க.வின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.