சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் மே.11-ம் தேதி வியாழக்கிழமைகிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெறுகிறது. மேலும் மகாருத்ர யாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை மே.11 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ர யாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது.
அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு மகா ருத்ர ஜபம் மே.1 ஆம் தேதி பொதுதீட்சிதர்களால் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10 நாள்கள் ருத்ர ஜப பாராயணம் நடைபெறுகிறது. மே.8 ஆம் தேதி திங்கள்கிழமை கூஷ்மாண்ட ஹோமம், நடராஜர் அனுக்ஞை நடைபெறுகிறது. மே.9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமமும், மே.10 ஆம் தேதி நவக்கிரக ஹோமம், தனபூஜை, ரட்சாபந்தனம் நடைபெறுகிறது. மே.11 ஆம் தேதி வியாழக்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு லட்சார்த்தனை, பின்னர் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அர்ச்சனை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடைபெறுகிறது. பின்னர் மதியம் மாக ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூர்ணாகூதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது.
இதனையடுத்து மாலை வடுக பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, ஆகிய பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையில் தீபாராதனை வேதபாராணயம். தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர், யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது.
மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் கா.சி.சிவசங்கர் தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.