சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 9-ஆம் தேதி புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வு மைய இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சனிக்கிழமை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.