தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாமிரவருணி-நம்பியாறு-கருமேனி ஆறு இணைப்பு, டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: துரைமுருகன்

டிசம்பர் மாதத்திற்குள் தாமிரவருணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதி நீர் இணைப்புத் திட்டம் முடிவடைந்து முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 மே 2023, 12:25 pm

DIN

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தாமிரவருணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதி நீர் இணைப்புத் திட்டம் முடிவடைந்து முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நதி நீர் இணைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். முதலாவதாக தாமிரவருணி ஆறு, நம்பி ஆறு, கருமேனி ஆறு இணைப்புத்திட்டப் பணிகளில் மூன்றாவது நிலையாக நடைபெற்று வரும் நாங்குநேரி அருகே உள்ள  கோவன்குளம் பகுதியை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் திட்டப்பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து   நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கடைசி பகுதியான தூத்துக்குடி மாவட்டம், எம்.எல்.தேரி  பகுயிலும் ஆய்வு செய்தனர். பின்னர்  நெல்லை பொன்னாக்குடியில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே நிதிநீர் இணைப்பு திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளையும் பார்வையிட்டார்.

Story image

தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை புயல் வேகத்தில் நடந்து வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு செய்ததன் அடிப்படையில்  வரும் செப்டம்பர், அக்டோபர்  மாதம் மழை காலங்களில் இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் முறையாக பணம் வழங்கவில்லை, தற்போது இடம் கொடுத்தவர்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது, நிதி ஆதாரத்தைப் பொருத்து அணைகள் தூர்வாரப்படும், கடனா நதி, ராமா நதி இணைப்புத் திட்டம், ஜம்பு நதி மேல் மட்ட கால்வாய்த்திட்டம் குறித்து அடுத்த மாதம் தென்காசி மாவட்டம் செல்கிறேன். அங்கு ஆய்வு செய்து திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். நிதி ஆதாரங்களை பொருத்து அணைகள் தூர்வாரும் பணி நடத்தப்படும். பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி உள்ளது. முறையாக அனுமதிகளை  பெற்றுத்தான் கொண்டு செல்கிறார்கள். கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சத கனராக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

முன்னதாக  அமைச்சர் துரைமுருகன் இடையன்குடியில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பி.சி.ராஜன், ஜோசப்பெல்சி, ஆரோக்கிய எட்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.