கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டு மதுவிலக்கு டி.எஸ்.பி துரைபாண்டி, விழுப்புரம் மதுவிலக்கு டி.எஸ்.பி பழனி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், செங்கல்பட்டு சம்பங்கள் தொடர்பாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 34 பேரையும் தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்தார்.