10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுபோல இன்று பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மே 23 ஆம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின