விராலிமலை: விபத்தில் 2 பேர் பலி: துக்க நிகழ்வுக்குச் சென்றுவந்தபோது நேர்ந்த சோகம்!
விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற ஜீப், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஜீப்பில் பயணித்த இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், ஜீப்பில் பயணம் செய்த மற்றும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில் 90 வயது மூதாட்டி ஒருவர் வயது மூப்பின் காரணமாக இறந்த துக்க நிகழ்வில் பங்கேற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள் ஒரு ஜீப்பில் கொடும்பாளூருக்கு சென்றுள்ளனர்.
ஜீப் கொடும்பாளூர் மூவர் கோவில் அருகே சென்ற போது திருச்சி மாவட்டம் வேம்பனூரில் இருந்து மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற இவர்கள் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் முன் பகுதியில் மோதியுள்ளது.
இதில் நிகழ்விடத்திலேயே பழனியப்பன்(20), சதீஷ்(18) ஆகிய இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஜீப்பில் பயணம் செய்த மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.