காட்பாடியில் ஓடும் இரயிலில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25), நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விரைவில் ரயில் மூலம் ஊர் திரும்பியுள்ளனர்.
இரயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிலர் கல்பனாவுக்கு ஓடும் இரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அதில் கல்பனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் இரயில் காட்பாடி இரயில் நிலையத்தை அடைந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரயில் நிலைய மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை அருகே உள்ள பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.