விழுப்புரம்: பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நண்பரான விழுப்புரம் பிரேம்நாத்தின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ. வேலுவின் நெருங்கிய நண்பரான விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்நாத்தின் வீடு அமைந்துள்ள சண்முகபுரம் காலனியிலுள்ள வீடு, கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள மார்பிள் கடை, தங்கும் விடுதி, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மோட்டார் விற்பனை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.