தமிழகத்திற்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு
தமிழகத்திற்கு நவ.23ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஒழங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னதாக இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் கடந்த 30ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீா் கோட்டத் தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பிற 3 மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
இதில், கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு நவம்பா் மாதத்தில் (15 நாள்கள்) தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது.
இறுதியாக, நவம்பா் 1 முதல் 23- ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.