தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அவர் மீதான புகார்களுக்கு உறுதியான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் எ.வ.வேலு தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் உள்ள இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் வீடு, அண்ணாநகர், வேப்பேரி, தியாகராயநகர், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீடு, எடப்பாளையத்தில் உள்ள அருணை கல்லூரி, அலுவலகம், அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், கரூரில் 4 இடங்கள் என மொத்தமாக 80 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | கரூரில் அமைச்சா் எ.வ.வேலு தொடா்புடைய 4 இடங்களில் 2வது நாளாக சோதனை
திருவண்ணாமலையில் 5 கல்லூரிகள் உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் இன்று சோதனை தொடர்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.