சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.31-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் அக்.31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (நவ.7-ம் தேதி) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளி மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இதையும் படிக்க: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
நவ-8ம் தேதி புதன்ழமை மாலை 5 மணிக்கு மேல் சிவகாமசுந்தரி அம்மனின் பட்டு வாங்கும் உற்சவம் நடராஜர் சந்நிதியில் நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மன் சந்திதியில் பூரச்சலங்கை உற்சவமும், நவ.9-ம் தேதி வியாழக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.