திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்புப் பணி அலுவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவ. 13 ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 18 ஆம் தேதியும் திருக்கல்யாணம் நவ. 19 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தத் தடை: ஓபிஎஸ் மேல்முறையீடு
இதற்காக, சிறப்புப் பணி அலுவலர்கள் 29 பேரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இவர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்புப் பணி அலுவலர்கள் கோயிலுக்கு வருகை புரியும்போது, வாக்கி டாக்கியை தவறாமல் கொண்டு வரவும் தங்கள் அலுவலகப் பணியாளர்கள் இருவரை தங்களுடன் அழைத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.