நீடாமங்கலம்: தீபாவளி திருநாளையொட்டி நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான ஆலங்குடி குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புராணங்களின்படி தீபாவளி என்பது கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாக விளக்குகளை வரிசையாக ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள குருபரிகார கோயிலில் நடைபெற்ற இந்த வழிபாட்டை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஆராதனைகளும் மகாதீபாராதனையும் காட்டப்பட்டன. குருபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
இதேபோல், திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில்,
காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேஸ்வரர் கோயில், சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.