சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு என்று அழைக்கப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு என்று அழைக்கப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்‌. 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன. இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 

தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com