ராசிபுரம்: ராசிபுரம் நகர்மன்ற சுயேட்சை பெண் உறுப்பினர் சசிரேகா சதீஸ்குமார் பண மோசடி வழக்கில் இன்று(செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
ராசிபுரம் நகர்மன்றத்தின் 12-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் சசிரேகா சதீஸ்குமார் (33). இவர் கடந்த நகர்மன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது மாமனார் வெங்கடாஜலம், கணவர் சதீஸ்குமார் ஆகிய மூவர் மீதும் பண மோசடி, செக்மோசடி, பண இரட்டிப்பு, வெளிநாட்டு கார்கள் வாங்கித்தருவது போன்றவற்றில் பலரிடம் பல கோடி மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூர் திமுக செயலாளராக உள்ள சி.செல்லவேல் (43) என்பவரிடம் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஆடி, கியா உள்ளிட்ட கார்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 கோடி பெற்றுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் நீண்டநாட்களாகியும் கார் இறக்குமதி செய்து வாங்கித் தராததால், செல்லவேல் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதையும் படிக்க | டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இழுத்தடித்து வந்த சதீஸ்குமார், பின்னர் செக் கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் செக், பணமில்லாமல் திரும்பி வந்ததால், சதீஸ்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பணம் வராத நிலையில் செல்லவேல் நாமக்கல் குற்றவியல் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வந்துள்ளனர்.
இந்நிலயைில் ராசிபுரம் நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்கு வந்திருந்த சசிரேகா சதீஸ்குமாரை குற்றப்பிரிவு காவல்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் கைது செய்தனர்.
மேலும் மாமனார் வெங்கடாஜலம், கணவர் சதீஸ்குமார் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாமக்கல் அழைத்துச் செல்லப்பட்ட சசிரேகாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | தயார் நிலையில் 4,967 நிவாரண முகாம்கள்: அமைச்சர் பேட்டி