அரக்கோணம்: அரக்கோணம் அருகே நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்தோர் காற்றுக்காக வெளியில் படுத்துறங்கியதால் உயிர் தப்பித்தனர்.
அரக்கோணம் அருகே தணிகைபோளூர் கிராமத்தில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான காலனி உள்ளது. இங்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1996-ஆம் ஆண்டு 28 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்டன.
இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்து இருப்பது குறித்து அந்த பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கும், ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், வியாழக்கிழமை இரவு கவுண்டமணி (32) என்பவரது வீடு உள்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த வீட்டில் வசித்த அவரது தாயார், மனைவி இரு மகள்கள் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காற்றுக்காக வீட்டின் வெளியில் படுத்து உறங்கியதால் உயிர் தப்பினர்.
இது குறித்து அறிந்த தணிகைபோளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம், ஊராட்சி செயலாளர் தனபால் ஆகியோர் குறிப்பிட்ட வீட்டையும் அதேபோல் இடிந்து விழும் நிலையில் உள்ள மேலும் 27 வீடுகளையும் பார்வையிட்டனர். மேலும் இடிந்து விழுந்த வீட்டில் வசித்தவர்களுக்கு தற்காலிகமாக வேறு இடம் ஒதுக்கி கொடுத்தனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தெரிவிக்கையில், இந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு அவர்களுக்கு புதிய வீடு கட்டித்தர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.