விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் பேருந்து நிலையம் அருகே 2023, மார்ச் 7-ஆம் தேதியும், வானூர் வட்டம் ஆரோவில் பேருந்து நிலையம் அருகில் மார்ச் 10-ஆம் தேதியும் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார்.
அப்போது, அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் தனித்தனியாக வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில், நவம்பர் 6-ஆம் தேதி தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று இந்த இரு வழக்குகளிலும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரானார்.
இதையும் படிக்க: தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கடைக்குள் குண்டு வீச்சு!
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) வெங்கடேசன் உத்தரவிட்டார்.