தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியது,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் தொடக்கத்தில் குறைவாக காணப்பட்டது. இருப்பினும், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
123 ஆண்டுகளில் 9வது முறையாக இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 10 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 23-ம் தேதி(இன்று) வரை 317.4 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 286.8 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதிகனமழையும், 8 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
மேலும் இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.