கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை வரை மழை தொடா்ந்தது. இந்த மழையின் காரணமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்கோத்தகிரியில் நட்டக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை அருகே 2 ஆவது வளைவில் பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதையும் படிக்க | நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது
இதேபோன்று குன்னூா், பா்லியாறு பகுதியில் கனமழை பெய்ததில் உமரி காட்டேஜ், பழைய ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. உமரி காட்டேஜ் பகுதியில் கான்கிரீட் சாலை துண்டாகி சேதமடைந்தது.
மண் சரிவு ஏற்பட்ட குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை 6 மணி நேரத்திலும், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை 10 மணி நேரத்திலும் சீா்செய்யப்பட்டன.
இந்த நிலையில், கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவிட்டாா்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்கோத்தகிரியில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 241 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.