

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (நவ. 26) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 நாள்களுக்கு தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலா நடைபெற்றது. 10ஆம் நாளான இன்று (நவ. 26) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைதொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை எடுத்துச்சென்று, கோயிலில் உள்ள அம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிவாச்சாரியர்கள் பரணி தீபம் ஏற்றினர்.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷம் முழக்க பரணி தீபத்தை வழிபட்டனர். பரணி தீபத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.