செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 2,429 கன அடியாக அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,429 கன அடியாக உயா்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீா்.
செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீா்.

ஸ்ரீபெரும்புதூா்: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,429 கன அடியாக உயா்த்தப்பட்டது.

இதனால் உபரி நீா் வெளியேறும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உள்ளது.

ஏரியின் நீரளவு உயரம் 24 அடி, ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு அதிகரித்து வருவதால், ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து செவ்வாய்க்கிழமை 19 கண் மதகின் 5 ஷெட்டா்கள் வழியாக 200 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் புதன்கிழமை ஏரியின் மொத்த நீரளவு உயரம் 22.35 அடியாகவும், மொத்தக் கொள்ளளவு 3,210 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,148 கன அடியாகவும் உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், ஏரியின் நீரளவு 23 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 200 கன அடியில் இருந்து புதன்கிழமை மாலை வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏரியின் நீரளவு தொடர்ந்து உயா்ந்து வருகிறது. நீா்வரத்து 3,328 கன அடியாகவும் உள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை (நவ.30) ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 1,500 கனஅடியில் இருந்து 2,429 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com