வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும், 5 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு அந்தமான அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.